;
Athirady Tamil News

விசாரணைக்கு ஆஜராகாமல் ‘டிமிக்கி’ கொடுத்ததால் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அரணவ் கைது..!!

0

சின்னத்திரை நடிகர் அரணவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அரணவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்ததற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அரணவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அரணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் சம்மன்
இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அரணவை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே நேற்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அரணவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். மேலும் அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகும் அரணவ் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரை போலீசார் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் போலீசார் அனுப்பிய சம்மனை அரணவ் பெற்று கொண்டதாகவும், நேற்று காலை விசாரணைக்கு அவர் ஆஜராவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

வக்கீல்கள் கடிதம்
இதையடுத்து அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல்கள் மாங்காட்டில் உள்ள போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று சென்று அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டரிடம் அரணவிற்கு கண்ணில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதன் காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் வருகிற 18-ந்தேதி அவர் விசாரணைக்கு ஆஜராவார் எனவும் விளக்க கடிதம் கொடுத்தனர். அந்த கடித்தத்துடன் அரணவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான சான்றுகள் ஏதும் தராததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது ‘சுவிட்ச் ஆப்’ என வந்தது. இதனால் வக்கீல்கள் கொடுத்த கடிதத்தை போலீசார் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் வக்கீல்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

அதிரடி கைது
தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அர்ணவ் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்கும் நாட்களுக்கு இடையில் அவர் முன் ஜாமீன் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரியவந்தது. இதையடுத்து அவர் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோண், இன்ஸ்பெக்டர் ராஜி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதைத்தொடந்து, தனிப்படை போலீசார் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் டி.வி.தொடர் படப்பிடிப்பில் இருந்த அரணவை அதிரடியாக கைது செய்தனர். அப்போது, போலீசார் வருவதை சற்றும் எதிர்பாராமல் இருந்த அரணவ் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

சரமாரி கேள்வி
இதையடுத்து அரணவை மாங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஏன் நாடகமாடி விட்டு படபிடிப்பிற்கு சென்றீர்கள்? என அவரிடம் போலீசார் சரமாரியாக கேள்வியை எழுப்பியதாக தெரிகிறது. விசாரணைக்கு ஆஜராகாமல் ‘டிமிக்கி’ கொடுத்து வந்த டி.வி.நடிகர் அரணவை படப்பிடிப்பு தளத்தில் வைத்தே போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நடிகர் அரணவ் அம்பத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.