;
Athirady Tamil News

தேசத்தை கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம பொறுப்பு உள்ளது- மத்திய உள்துறை மந்திரி உறுதி..!!

0

அரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கிய மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் சிந்தனை அமர்வு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளதாவது: இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை ஒரு காலத்தில் வன்முறை மற்றும் அமைதியற்ற இடங்களாக இருந்தன. தற்போது அவை வளர்ச்சியின் இடங்களாக மாறியுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது. பெரும்பாலான இடங்கள், தேசவிரோத செயல்களிலிருந்து விடுபட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும்தான் இதற்குக் காரணம். தேசத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் நல்ல நிர்வாகத்திற்கும், உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது. அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது.

தேசத்தை கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம பொறுப்பு இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கும் போதுதான் நாடு முன்னேற்றம் அடையும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி உணர்வு நம்மை இயக்கும் சக்தியாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாநில முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் இந்த மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.