;
Athirady Tamil News

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை!!

0

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பொறிமுறையொன்றை உடன் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை பூரணமாக கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட கடற்றொழில் அதிகாரிகளுடன் இன்று (ஜன 24) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்ற குறுகிய அரசியல் நோக்கங்கொண்டவர்களினால் இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாடுகளுக்கிடையேயான அசௌகரியங்களை உருவாக்கக்கூடிய எந்தவிதமான செயற்பாடுகளையும் அனுமதிக்க முடியாதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் எமது கடற் பரப்பிற்கு வருகின்ற நிலையில் கடற் படையினரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்படை அதிகாரி, சீரற்ற காலநிலை போன்ற காரணங்களினால் கடந்த மாதங்களில் கடற்படை செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்ததாகவும் எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், உள்ளூர் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதுடன் கடத்தல் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்கள் சம்பந்தப்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டி இருக்கின்றது.

எனவே, கடற்றொழில் மாவட்டங்கள் தோறும் ஆலோசனைக் குழுக்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்குழுக்களில் கடற்றொழில் அமைச்சின் உயரதிகாரிகள், கடற்படையின் உயரதிகாரிகள் மற்றும் கடற்றொழில் சம்மேளனப் பிரதிநிதிகளை இக்குழுவில் உள்ளடக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.