;
Athirady Tamil News

ராகுல் காந்தி தேசத்துக்கு துரோகம் செய்யக்கூடாது: அனுராக் தாக்கூர் சாடல்!!

0

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்புகள் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட உலகின் ஜனநாயக பகுதிகள் அதை கவனிக்கத் தவறிவிட்டன என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழை ராகுல் காந்தி கெடுத்துவிட்டதாக பா.ஜ.க. வினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கு துரோகம் செய்யாதீர்கள் ராகுல் காந்தி. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மீதான ஆட்சேபனைகள், இந்தப் பிரச்சினையை பற்றிய உங்கள் புரிதல் குறைவாக இருப்பதற்கான சான்றாகும். அன்னிய மண்ணில் இருந்து இந்தியா பற்றி நீங்கள் பரப்பும் பொய்களை யாரும் நம்ப மாட்டார்கள்.

உள்ளூர் பிரச்சினைகளை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது மூலம் அவரது கட்சி ஏற்கனவே இந்த தவறை செய்துள்ளது. இப்போது இந்தியாவில் தலையிடுமாறு மற்ற நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார். அவர்கள் இன்னும் அடிமைச் சிந்தனையில் இருந்து வெளிவரவில்லை. ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைக்கும் சதியின் ஒரு பகுதியாக அன்னிய மண்ணில் இருந்து இந்தியாவை அவதூறு செய்து வருகிறார். இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.