;
Athirady Tamil News

நீச்சல் பழகிய சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி!!

0

ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், அரபு பாலம் பகுதியை சேர்ந்தவர் கங்கு நாயுடு. ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் பவன் (வயது 8), சரண் (7). இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தற்போது தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுமுறையில் வீட்டில் இருக்கும் மகன்களுக்கு நீச்சல் கற்றுத் தர வேண்டும் என கங்கு நாயுடு முடிவு செய்தார். இதையடுத்து அனக்கா பள்ளி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றார். முதல் நாள் பயிற்சியாளர் உதவியுடன் நீச்சல் பழக கற்றுக் கொடுத்தார். நேற்று மாலை 2-வது நாளாக மகன்களை நீச்சல் குளத்துக்கு கங்கு நாயுடு தனது மகன்களுடன் சென்றார். நீச்சல் குளத்தில் நீச்சல் பழக மகன்களை இறக்கி விட்டார்.

அப்போது பவன், சரண் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கங்கு நாயுடு நீச்சல் குளத்தில் இறங்கி 2 மகன்களையும் வெளியே கொண்டு வந்தார். அவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இருவரையும் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவன் பவன் இறந்து விட்டார். இதனை கண்டு கங்கு நாயுடு அழுது துடித்தார். 2-வது மகன் சரண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அனக்கப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.