;
Athirady Tamil News

விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி!!

0

இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் பணியாளர் பற்றாக்குறை தொடர்பில் பல்கலைக்கழகங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதங்களுக்கு அமைவாக, பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கேற்ப பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அமைச்சரவைியின் அனுமதியின் படி, 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஓய்வுபெறும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்குச் சமமான தொகை ஆளணியை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும், 2023 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகும் அல்லது சேவை வறிதாக்குதலுக்கு உட்படுத்தப்படும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்காக 2023 ஆம் ஆண்டுக்கென உத்தேசிக்கப்பட்ட ஆளணி ஒதுக்கீட்டுக்குச் சமனான விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம், கடந்த வாரம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளைக் கரிசனையுடன் கேட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அவை குறித்துக் கவனம் செலுத்துமாறு தனது அதிகாரிகளுக்குப் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.