;
Athirady Tamil News

இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்

0

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐஃபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும், இந்தியா அல்லது வெளியே எங்கு உற்பத்தி செய்தாலும் 25 சதவீத வரியை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்டு, இந்தியாவில் உற்பத்தி ஆலையைத் தொடங்கவிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை, டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐஃபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை பல காலத்துக்கு முன்பே, டிம் குக்குக்கு நான் வலியுறுத்திவிட்டேன், இந்தியா என்றில்லை, அமெரிக்காவுக்கு வெளியே எங்கும் உற்பத்தி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கண்டிப்பாக 25 சதவீத வரியை ஆப்பிள் எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது ஆப்பிள் ஐஃபோன் நிறுவனம் கிட்டத்தட்ட 60 மில்லியன் ஐஃபோன்களை ஆண்டுதோறும் அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது. அதன் உற்பத்தியில் 80 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்படுபவை.

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தி ஆலையை தொடங்க டிம் குக் திட்டமிட்டிருப்பது குறித்து இரு தலைவர்களும் கடந்த வாரம் கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியச் சந்தையில் விற்பனை செய்வதற்காக இந்தியாவில் உற்பத்தி செய்வதாக இருந்தால் பரவாயில்லை, இந்தியாவை கட்டமைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை, அவர்களே அவர்களை கவனித்துக் கொள்வார்கள் என்றும் டிரம்ப் கருத்துக் கூறியிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.