பிரித்தானிய நதியொன்றில் கலக்கப்பட்ட 3 டன் யுரேனிய கழிவுகள்., சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை

பிரித்தானியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட நதியொன்றில் 3 டன் யுரேனியம் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் மிக அதிகமாக பாதுகாக்கப்படும் இயற்கை பகுதிகளில் ஒன்றான ரிபிள் நதியில், கடந்த 9 ஆண்டுகளில் 3 டன் யுரேனியம் கழிவுகள் சட்டப்படி தண்ணீரில் கலந்து வெளியிடப்பட்டுள்ளது என்பது தற்போது வெளிவந்துள்ளது.
Springfields Fuels என்ற அணுகருவி எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம், 2015 முதல் 2024 வரையிலான காலத்தில், சுற்றுச்சூழல் அனுமதியின் கீழ் இந்த யுரேனியம் கழிவுகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 2015-ல் மட்டும் 703 கிலோ யுரேனியம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கழிவுகள் வெளியிடப்பட்ட இடம், ரிபிள் எஸ்சுவேரி கடல் பாதுகாப்புப் பகுதி என்கிற Ramsar மற்றும் SPA சான்றுகள் பெற்ற இடத்திற்கு மிக அருகில் உள்ளது.
இது விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நெருக்கடியான பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2009-ஆம் ஆண்டு ஒரு மதிப்பீட்டில், இத்தளத்தில் உள்ள உயிரினங்கள் மிகவும் அதிகமான கதிர்வீச்சு அளவுகளை எதிர்கொள்கின்றன எனக் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் கழிவுகளுக்கான அனுமதிகள் தளர்த்தப்பட்டாலும், வணிக நலன்களை முன்னிலைப்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பசுமை அமைப்புகள் மற்றும் விஞ்ஞானிகள், இந்த அளவிலான கதிர்வீச்சு கழிவுகள் மனிதனுக்கும் உயிரியல் மண்டலத்திற்கும் அபாயம் ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
இந்த விவகாரம், பிரித்தானியாவின் எதிர்காலத்தில் அணு எரிபொருள் உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டங்களில் கேள்விகளை எழுப்புகிறது. Springfield Fuels நிறுவனம் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.