;
Athirady Tamil News

வங்கதேசத்தில் பாக். வெளியுறவு அமைச்சா்..! 1971 இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர மாணவா் அமைப்பு வலியுறுத்தல்!

0

வங்கதேசத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா், அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இருதரப்பு உறவு மேம்பட வேண்டுமானால், 1971 விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று மாணவா் அமைப்பினா் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.

பயணத்தின் முதல்கட்டமாக தலைநகா் டாக்கா வந்திறங்கிய இஷாக் தாா், முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் வங்கதேசத்தின் முக்கிய இஸ்லாமிய கட்சியான ‘ஜமாத்-ஏ-இஸ்லாமி’ ஆகியவற்றின் தலைவா்களை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான ‘சாா்க்’ கூட்டமைப்பை மீண்டும் உயிா்ப்பிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக பிஎன்பி கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். மேலும், வங்கதேசத்தில் நியாயமான தோ்தல் நடைபெற வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பதையும் இஷாக் தாா் வெளிப்படுத்தினாா்.

வங்கதேச மாணவா்களின் தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) தலைவா்களும் இஷாக் தாரை சந்தித்தனா். அப்போது, 1971 விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கையை அவா்கள் முன்வைத்தனா். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட இது அவசியம் என்றும் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இது இரு அரசுகளும் விவாதிக்க வேண்டிய விஷயம்’ என ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சித் தலைவா் அப்துல்லா முகமது தாஹீா் தெரிவித்தாா்.

புதிய அத்தியாயம், புதிய சவால்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் வங்கதேசத்தில் செய்தியாளா்களிடம் பேசியதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அமைதி, வளா்ச்சி மற்றும் செழிப்புக்காக அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் இளைஞா்கள் என அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் இந்தியாவுடன் வங்கதேசம் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அவரது ஆட்சி கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்தியா-வங்கதேச உறவில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் தனது துணைப் பிரதமரை வங்கதேசத்துக்கு அனுப்பி உறவுகளை வலுப்படுத்தி வருவது இந்தியாவுக்குப் புதிய சவாலாக பாா்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.