;
Athirady Tamil News

16 நாட்களுக்கு பின்னர் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த் – விஜய் உடன் பேசியது என்ன?

0

தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

விஜய்யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இருவரும் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்றதில் இருந்து தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் வெளியே வரவில்லை.

தவெக பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா மட்டும் டெல்லி சென்று வழக்கு தொடர்பான விவகாரங்களை கவனித்து வந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
புஸ்ஸி ஆனந்த் கடந்த 16 நாட்களாக தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு சென்று அவருடன் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு முடிந்ததும், புஸ்ஸி ஆனந்த் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பாதுகாப்பு கோரி விஜய் தரப்பில் இருந்து காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை மொத்தமாக நேரில் சந்தித்து நிவாரணம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

மேலும், 41 குடும்பங்களையும் விஜய் தத்தெடுக்க உள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.