;
Athirady Tamil News

இஷாரா செவ்வந்தி கைது ; நேபாளம் சென்ற இலங்கை STF அதிகாரிகள்!

0

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளம் புறப்பட்டு சென்றுள்ளனர்.

நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக STF அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் இன்று (15) மாலை STF அதிகாரிகள் நாட்டுக்கு திரும்பவுள்ளனர்.

இஷாரா செவ்வந்தியுடன் நான்கு பேர் கைது
நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தற்போது பொலிஸ் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியும் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது ‘கணேமுல்ல சஞ்சீவ’, கடந்த பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை கெஹெல்பத்தர பத்மேவின் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சமிந்து தில்ஷான் பியுமங்க, புத்தளம் – பாலாவி பகுதியில் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிசிரிவி கமராக்களை சோதனை செய்தபோது, துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவருக்கு உதவியாக பெண்ணொருவர் காணப்பட்டமை தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட பெண் சட்டத் துறையில் பயன்படுத்தப்படும் புத்தகம் ஒன்றில் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்தமை தெரியவந்தது.

அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண் என்பது தெரியவந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.