மரணத்திற்கு காரணமான SLTB சாரதி மீது கடூழிய சிறை
ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக 15,000 ரூபா அபராதமும், உயிரிழந்தவரின் தரப்பினருக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடும் செலுத்துமாறு கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் பிரதிவாதியான சாரதிக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி ஓடுவதற்கு தகுதியற்ற இ.போ.ச பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் கவனயீனமாகச் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த இ.போ.ச சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கி, குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதிவாதி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம், அவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் நஷ்டஈடு ஆகியவற்றை விதித்துள்ளது.
அத்துடன், பிரதிவாதியான இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.