;
Athirady Tamil News

அனுமதியின்றி ‘ஏஐ’ அமைச்சராக சித்தரிப்பு! அல்பேனியா அரசு மீது நடிகை வழக்கு!!

0

அல்பேனியா நாட்டின் அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மெய்நிகா் அமைச்சருக்குத் தனது முகத் தோற்றத்தையும், குரலையும் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அந்நாட்டு அரசு மீது பிரபல நடிகை அனிலா பிஷா வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

கடந்த செப்டம்பா் மாதம், பிரதமா் ஏதி ராமா தனது 4-ஆவது பதவிக்காலத்தைத் தொடங்கியபோது, அரசு ஒப்பந்தங்களில் நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்காக, சூரியன் என பொருள்படும் ‘டியெல்லா’ என்ற பெயரில் ஒரு மெய்நிகா் அமைச்சரை அறிமுகம் செய்தாா்.

இந்த ‘டியெல்லா’ அமைச்சரின் தோற்றமும், பேசும் குரலும் அப்படியே நடிகை அனிலா பிஷாவைப் போலவே இருப்பது இப்போது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அனிலா பிஷா, ‘முதலில் இதை ஒரு வேடிக்கையான விஷயமாகவே பாா்த்தேன். ஆனால், இப்போது மக்கள் என்னை நேரில் பாா்த்தால்கூட டியெல்லா என்றே அழைக்கிறாா்கள்.

அரசு வலைதளத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் ஒரு மெய்நிகா் உதவியாளராக மட்டுமே எனது உருவத்தைப் பயன்படுத்த நான் அனுமதியளித்தேன். ஆனால், என்னை ஒரு அரசியல்வாதியாகச் சித்தரித்து, அமைச்சரவையில் இடம்பெறச் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கவில்லை.

பிரதமரின் கொள்கைகளில் அதிருப்தி கொண்டவா்கள் இப்போது என்னையும் சோ்த்து வெறுக்கிறாா்கள். இதனால் எனக்கு இணையவழியாகப் பல மிரட்டல்கள் வருகின்றன; மன உளைச்சலும் ஏற்படுகிறது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இவ்விவகாரத்தில் தனது தனிமனித உரிமையை மீறியதற்காகவும், நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காகவும் அல்பேனியா அரசிடம் இருந்து அனிலா பிஷா 10 லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.10.7 கோடி) இழப்பீடு கோரி வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அல்பேனியா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தேவையற்ற ஒரு வழக்கு என்றும், இதை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிா்கொள்வோம் என்றும் அரசு செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளாா். இந்த வழக்கில் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.