;
Athirady Tamil News

அதிபர் டிரம்ப் – மேயர் மம்தானி சந்திப்பு! கைதான பல்கலைக்கழக மாணவி விடுதலை!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் கடந்த வியாழக்கிழமை (பிப். 26) நியூயார்க் நகர மேயர் மம்தானி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், அதிபர் டிரம்ப்புடன் நியூயார்க் நகரத்தில் வீட்டுவசதிகளை மேம்படுத்தும் மாபெரும் திட்டங்கள் குறித்து மேயர் மம்தானி பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை கொலம்பியா பல்கலைக்கழக விடுதியில் சட்டவிரோதமான முறையில் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளால் அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த எல்லி அகயேவா என்ற மாணவி கைது செய்யப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பிரபலமாக அறியப்படும் அந்த மாணவி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பதிவிட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பில் அந்த மாணவியை விடுதலை செய்யவேண்டுமெனவும், இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடுமாறும் நியூயார்க் மேயர் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு, அதிபர் டிரம்ப் உடனடியாக ஒப்புக்கொண்ட நிலையில், கொலம்பியா பல்கலைக்கழக மாணவியான எல்லி அகயேவா வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மேயர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானியை நாடுகடத்துவேன் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், தற்போது மம்தானியுடனான சந்திப்பில் அவரது கோரிக்கைகளை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.