;
Athirady Tamil News

உங்களிடமே நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கிறீர்கள் போலும் – அமெரிக்காவை கிண்டல் செய்த ஈரான்

0

தெஹ்ரான்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும்.

அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார். ஆனால் அமெரிக்கா, ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஈரானின் பல்வேறு நாடுகளுக்கான தூதர்களும் கூட தொடர்ந்து இதனை மறுத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரான் ராணுவத்தின் ஒருங்கிணைந்த படைக்கான செய்தி தொடர்பாளர் இப்ராகிம் ஜல்பகாரி இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் பேசும்போது, அமெரிக்கா தன்னுடைய போரில் தோற்று கொண்டிருக்கிறது. அதனால், தன்னை தற்காத்து கொள்வதற்காக அமெரிக்கா தன்னிடமே பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது என்றார். போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறும் விசயங்களை மறுத்து உள்ளார்.

உங்களுடைய தோல்வியை போய் ஒப்பந்தம் என்று கூறாதீர்கள் என்றும் அவர் கூறினார். ஆனால், ஈரானில் உள்ள சரியான மக்களுடன் அமெரிக்கா பேசி வருகிறது என ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்கள் முன்பு பேசும்போது கூறினார். அவர்கள் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த விருப்பத்துடன் இருக்கிறார்கள். எங்களுடன் பேசி வருகிறார்கள் என்றும் அப்போது கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.