;
Athirady Tamil News

அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கின்றது – அரசாங்க அதிபர் தெரிவிப்பு

0
யாழ் மாவட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்ட தெளிவூட்டல் நிகழ்வு இன்றைய தினம் (15.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமை உரையாற்றிகையில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மட்டத்தில் நீண்ட காலமாக அனுபவமிக்க உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றார்கள் எனவும், காலத்திற்கு காலம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் தங்களது செயற்பாடுகளை கடந்த காலத்திலும் சிறப்பாக முன்னெடுத்திருந்தார்கள். உதாரணமாக கடந்த காலத்தில் டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் கூட மக்களுக்கான உதவித்திட்டங்களை வழங்குவதில் கிராம அலுவலர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்த வகையில் சிறப்பாக செயற்பட்டிருந்தமை பராட்டுக்குரியதாகும். மேலும், அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கிறது எனவும் தற்போதைய அரசாங்கத்தினுடைய பிரதான கொள்கைகளாக கிளீன் ஸ்ரீலங்கா, டிஜிட்டல் மயமாக்கல், சமூக சக்தி ஆகிய செயற்பாடுகள் காணப்படுகின்றன. எனவும், ஆகவே அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களாக அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் காணப்படுகிறோம் எனவும் தெரிவித்தார். மேலும்,
இந்தத் திட்டங்களை சமூக சக்தி (பிரஜாசக்தி) செயற்பாட்டை பிரதேச மட்டத்தில் செயற்படுத்துவதில் இந்த சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றார்கள். குழுவின் செயலாளர்களாக இருந்து அந்தக் குழுவை கொண்டு நடாத்துகின்ற பொறுப்பு அவர்களைச் சார்ந்ததாக இருக்கிறது எனவும், இதனால் உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கான தெளிவூட்டல்களை பெற்றுக்கொள்வதற்காகவே இக் கூட்டத்தை பகுதி பகுதியாக நடைபெற்றுவருகிறது எனவும், தொடர்ந்து தலைவர்களுக்கான கலந்துரையாடலும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும்,
ஆகவே, சமூக சக்தி செயற்பாட்டை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாட்டினை மேற்கொள்கின்றபோது உங்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் காணப்படுமாக இருந்தால் அந்த விடயங்களை இங்கு தெரிவிப்பதன் மூலம் தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், உங்களது கிராமம் சார்ந்த விடயங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்ற நீங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் சிறப்பாக கொண்டு செல்ல முடிவதுடன் மிகச் சரியான முறையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்துகின்ற புதிய திட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இரண்டாம் கட்டமாக சாவகச்சேரி, கோப்பாய், ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு
குறித்த தெளிவூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்  சுரேந்திரநாதன் சமூக சக்தி (பிரஜாசக்தி) குழுவின் வகிபாகங்கள் தொடர்பில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமூக அபிவிருத்தி சபையின் செயலாளர்களான சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார்.

தொடர்ந்து, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்குரிய தெளிவூட்டல்களை இக் கூட்டத்தில் பெற்றுக் கொண்டார்கள்.

இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான  எஸ்.கபிலன், சாவகச்சேரி கோப்பாய், ஊர்காவற்றுறை, வேலணை பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், குறித்த பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், விடைய உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.