;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கு எதிராக அதிரடி முடிவெடுத்த இத்தாலியின் மெலோனி

0

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தனது அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

விரிசலை பிரதிபலிப்பதாக
மத்திய கிழக்கில் மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், முன்பு நெருங்கிய நட்பு நாடுகளாகத் திகழ்ந்த இரு நாடுகளுக்கு இடையிலான விரிசலை இது பிரதிபலிப்பதாகவே கூறுகின்றனர்.

மெலோனியின் வலதுசாரி அரசாங்கம் ஐரோப்பாவில் இஸ்ரேலின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது; இருப்பினும், அண்மைய வாரங்களில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை, அத்தாக்குதல்கள் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, ஆயிரக்கணக்கானோரைப் காயப்படுத்தியுள்ள நிலையில் மெலோனி அரசாங்கம் விமர்சித்துள்ளது.

மட்டுமின்றி, ஐ.நா.வின் ஆணையின் கீழ் லெபனானில் பணியாற்றி வரும் இத்தாலியப் படைகளை நோக்கி, கடந்த வாரம் இஸ்ரேல் எச்சரிக்கைக்காகச் சுட்டது; இதனால் ஒரு வாகனம் சேதமடைந்தது.

இந்த நிலையில், எங்களுக்கு உடன்படாத விடயங்களில், ​​நாங்கள் அதற்கேற்ப செயல்படுவோம் என்று மெலோனி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தன்னிச்சையான புதுப்பித்தலை நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, போப் லியோவின் மீதான அவரது தாக்குதல்களுக்காக மெலோனி விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இஸ்ரேல் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தானாகவே புதுப்பிக்கப்படும்
மெலோனி இஸ்ரேல் தொடர்பான தனது முடிவை, நாட்டின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களான அன்டோனியோ தஜானி மற்றும் குயிடோ குரோசெட்டோ ஆகியோருடனும், துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி ஆகியோருடனும் இணைந்து எடுத்துள்ளார் என்றே தகவல் கசிந்துள்ளது.

இதனையடுத்து இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில், இத்தாலியுடன் எங்களுக்கு எந்தப் பாதுகாப்பு ஒப்பந்தமும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு எட்டப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே எங்களிடம் உள்ளது; அதில் ஒருபோதும் எந்தவொரு சாராம்சமான உள்ளடக்கமும் இருந்ததில்லை. இது இஸ்ரேலின் பாதுகாப்பைப் பாதிக்காது என பதிலளித்துள்ளது.

இத்தாலியின் அப்போதைய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் அரசாங்கத்தால் 2003-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தக் குறிப்பு, 2006-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது; மேலும், ஒப்பந்தத் தரப்பினரில் ஒருவர் விலகிக்கொள்ளாத வரையில், இது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் தானாகவே புதுப்பிக்கப்படும் வகையிலமைந்திருந்தது.

இந்த ஒப்பந்தமானது கொள்முதல், பயிற்சி, மற்றும் பாதுகாப்பு மற்றும் இராணுவ உபகரணங்களின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.