இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு ; பொலிஸார் எச்சரிக்கை
இலங்கையில் மிக இளவயதிலுள்ள சிறுமிகள் தாய்மார்களாக மாறும் நிலை, அதாவது யௌவன வயது கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது பெற்றோரும் குழந்தைகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சினையாகும் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடும்பங்களுக்குள் உள்ள உணர்ச்சி பிணைப்புகள் குறைந்து வருவது குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக பயன்பாடு
பல பெற்றோர் வேலைப்பளுவின் காரணமாக தங்கள் மகள்களின் நாளாந்த வாழ்க்கை, பிரச்சினைகள் மற்றும் உணர்ச்சி தேவைகளை புரிந்து கொள்ள போதிய நேரம் செலவிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
வீட்டில் தேவையான அன்பும் கவனமும் கிடைக்காதபோது, சில இளம்பெண்கள் குடும்பத்திற்கு வெளியுள்ளவர்களிடமிருந்து அன்பும் ஆதரவும் தேடுவதற்கான நிலை ஏற்படுகிறது என பொலிஸாருக்கு கிடைக்கும் புகார்களில் தெரியவந்துள்ளது.
இதனால் பலர் மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தும் பழக்கத்துக்குத் தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலைகள் கல்வி பாதிப்பு, சிறுவயது இழப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என பொலிஸார் எச்சரிக்கின்றனர்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் திறந்த உரையாடலைக் கொண்டிருக்க வேண்டும், அவர்களின் நடத்தை மாற்றங்களை கவனிக்க வேண்டும், சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக Facebook, Instagram, WhatsApp போன்ற தளங்களில் அறிமுகமற்ற நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கவும், தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் பிரச்சினை, அச்சுறுத்தல் அல்லது சந்தேகம் ஏற்பட்டால் அதை மறைக்காமல் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு குடும்பங்களின் விழிப்புணர்வு மற்றும் திறந்த தொடர்பு மூலம் சிறுவர் மீதான குற்றங்கள் மற்றும் யௌவன கர்ப்பங்களைத் தடுப்பது சாத்தியம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை ஏற்பட்டால் 119, 118, 109 அல்லது 107 என்ற அவசர அழைப்பு எண்களுக்கு தகவல் வழங்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.