கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு!
ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடங்கிய போரானது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப், துணைப் பிரதமர் இஷாக் தார் மற்றும் பாகிஸ்தானின் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வரும் ஜூலை 4 ஆம் தேதி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தெஹ்ரானில் தொடங்கவுள்ளன. இதனைத் தொடர்ந்து, கமேனியின் பிறந்த ஊரும், ஈரானின் புனித நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் மஷாதில் வரும் ஜூலை 9 ஆம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என ஈரானிய அரசு அறிவித்துள்ளது.
மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அரசு சார்பில் மத்திய இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, பிகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.