;
Athirady Tamil News

மக்கள் மத்தியில் அடிப்படை வசதிகளை உருவாக்குவதே உண்மையான அபிவிருத்தி

0
மீனவர் சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான முக்கிய முன்னெடுப்பு வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தெரிவிக்கையில்,

கடலை வாழ்வாதாரமாகக் கொண்டு தினமும் உழைத்து வரும் மீனவர் சமூகத்தின் தொழில் முன்னேற்றம், வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் வடக்கின் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மீன்வளப் பொருட்களின் தரத்தைப் பாதுகாப்பது தற்போதைய கடற்றொழில் துறையில் மிக முக்கியமான சவாலாக காணப்படுகின்றது.

குறிப்பாக சந்தைகளுக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பப்படும் மீன்களின் தரம் பாதுகாக்கப்படுவது அதன் விலை, சந்தை நம்பிக்கை மற்றும் வருமானத்துடன் நேரடியாக தொடர்புடையதாகும்.

இதனை கருத்தில் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நன்னீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தரமான ஐஸ்கட்டிகளை மீனவர்களுக்கு வழங்கும் வகையில் இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உற்பத்தி நிலையம் மூலம் வேலணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் தரமான பனிக்கட்டிகளை குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுவதோடு, மீன்களை நீண்ட நேரம் தரமாகப் பாதுகாக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

இதன் மூலம் அவர்களின் தொழில் செலவினங்கள் குறைவதோடு வருமானத்திலும் நேர்மறையான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பது திட்டங்களை அறிவிப்பதிலோ கட்டிடங்களை அமைப்பதிலோ மட்டும் இல்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் அடிப்படை வசதிகளை உருவாக்குவதே உண்மையான அபிவிருத்தி என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பின் நிர்வாகிகள், அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.