யாழில் வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள் ; கோழிகள் முதல் நகைகள் வரை கொள்ளை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் வசிப்பவர்கள் தங்களது மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கடந்த 26ஆம் திகதி காலை வீட்டிலிருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட திருடர்கள், வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தங்கத் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பிற்கு சென்ற குடும்பத்தினர் நேற்று (27) மாலை வீடு திரும்பியபோது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
