களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு வாகனம் மீட்பு
களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும் ஒரு வாகனம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை – மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த வெள்ளை நிற சிறிய ரக வேன் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்துக்கு முன்பு சந்தேக நபர்கள் வந்த வாகனம் இதுவென்றும் குறித்த வேனில் இருந்தே துப்பாக்கிதாரிகள் கார் ஒன்றுக்கு மாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வந்த கார், தெபுவன – நேபட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தற்போது இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.