;
Athirady Tamil News

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா புழக்கம்; சாதுக்களிடம் போலீசார் தீவிர விசாரணை

0

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலம் பாதையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவல பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் பக்தர்களிடம் பிச்சை பெற்று வாழ்ந்து வருகின்றனர். சாதுக்கள் சிலருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளதாக காவல்துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

மேலும் சமீபத்தில் திருவண்ணாமலையில் ஆய்வு பணியில் ஈடுபட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திருவண்ணாமலையில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது என்றும், அதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கஞ்சா பறிமுதல்
இதனைத்தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மாற்று உடையில் கிரிவலப்பாதையில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்தில் இருந்து காஞ்சி சாலை வரையில் கிரிவலப்பாதை முழுவதும் நடந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிரிவலப்பாதையில் தங்கியிருந்த சாதுக்களின் உடைமைகளை போலீசார் பார்வையிட்டு சோதனை செய்தனர். மேலும் அவர்கள் தங்கி இருந்த இடங்களிலும் கஞ்சா ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சோதனை செய்யப்பட்டது. யாரேனும் கஞ்சா வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் சாதுக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சோதனையில் 2 சாதுக்களிடம் இருந்து சுமார் 60 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் எங்கிருந்து அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.