“பெண்களை வலுப்படுத்தும் சேவைகளை பொதுமக்களுக்கு நெருக்கமானதாக மாற்றுவது அவசியம்” – அமைச்சர் சரோஜா சாவித்திரி
பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு வழங்கும் சேவைகளை மேலும் தரமுயர்த்தி பொதுமக்களுக்கு மிக நெருக்கமான சேவையாக மாற்றுவது அவசியமாகும் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (30.06.2026) நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடானான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அவர்களால் பெண்கள் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டதுடன், பின்வரும் விடயங்களைத் தெரிவித்ததுடன், உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
01.ஒவ்வொரு சிறுவர், பெண்களுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும். பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு, நாம் வழங்கும் சேவைகளை மேலும் தரமுயர்த்தி பொதுமக்களுக்கு மிக நெருக்கமான சேவையாக மாற்றுவது அவசியமாகும்.
02.சமூகத்தில் பாதிக்கப்படும் மற்றும் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வாழ்வாதார தேவைப்படுகள், வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் திட்டங்களில் முன்னுரிமை அளிக்குமாறு ஆலோசனைகளை வழங்கினார்.
03.ஆளணி தொடர்பில் மாவட்ட உத்தியோகத்தர்களுடன் கேட்டறிந்து கொண்டதுடன் வெற்றிடம் நிலவுகின்ற இடங்களுக்கான பணிகள் தொடர்பில் கேட்டறிந்து ஆலோசனை வழங்கியதுடன் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
04.பாடசாலை இடைவிலகல்கள் தொடர்பிலும் அதற்கான காரணங்களை ஆராய்ந்த அமைச்சர் கடந்த காலாண்டில் 69 இடை விலகல்களில் 60 மாணவர்கள் மீளிணைக்கப்பட்ட செயற்பாட்டை பாராட்டினார்.
05.பிரதேச செயலகங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தனித்தனி கோவைகளை பேணுமாறும் அவர்களது தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதன் ஊடாக எதிர்காலங்களில் இவ்வாறான விடயங்களை தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
06.பாடசாலைகளில் இடை விலகும் மாணவர்களின் சரியான காரணங்களை இனங்காணும் பட்சத்தில் அவர்களுக்கு உதவு தொகையாக ரூபா. 5,000.00 வழங்குவதற்கு ஏதுநிலை காணப்படுகிறது எனவும், அச் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
07.சிறுவர் துஷ்பிரயோக விடயங்களின் நீதிமன்ற நடவடிக்கைகள், குடும்ப பாதுகாப்பு, அவர்களின் வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக வினைத்திறனாக செயலாற்ற வேண்டும். துஷ்பிரயோக விடயங்கள் நடந்த பின்பு பேசுவதை விட சம்பவம் நடக்க முன்னர் கண்காணிப்புகளை மேற்கொள்வது அவசியமானதாகும் எனவும் அறிவுறுத்தினார்.
08.மகளிர் செயற்பாட்டு சங்கங்களின் அங்கத்தவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக “பெண்கள் சந்தை” வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஏது நிலைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
09.முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள கொடுப்பனவு திருத்தம் மற்றும் அவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
10.முழுமைப்படுத்தப்பட்ட தகவல்கள் புள்ளி விபரங்கள் கொள்கை ரீதியாக தீர்மானங்களை எட்டுவதற்கு ஏதுவாக உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கினார்.