வெனிசுவேலா நிலநடுக்கம்: 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதம்!
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் காரணமாக அங்குள்ள 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாக நாசா வெளியிட்ட செயற்கைக்கோள் தரவுகளின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி தெரிய வந்துள்ளது.
ஜூன் 25 அன்று 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் பதிவான இரு நிலநடுக்கங்களால் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலா மோசமாக உருக்குலைந்துள்ளது. இந்தப் பேரிடரால் இதுவரை 1,700-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
வெனிசுவேலாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட மறுநாள் சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் ரேடார் தரவுகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 58,870 கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என ஓரேகான் மாகாண பல்கலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் அதிக தெளிவுத்திறன் கொண்ட ரேடார் செயற்கைக்கோளான சென்டினல்-1 மூலம் கிடைத்த தரவுகளை அவர்கள் மேற்கோள் காட்டினர். இந்த எண்ணிக்கை சேதம் தொடர்பான முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே என்றும் இது களத்தில் சரிபார்க்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய பேரவைத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிகஸ் கூறுகையில் 855 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் 189 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் நேற்று தெரிவித்தார்.
மீட்பு குழுக்கள் அவசரகால உதவியை வழங்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டவும் செயற்கைக் கோள் தரவுகளை வழங்கி ஆதரவளித்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.