பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்! குழந்தைகளுக்கு ஏற்பட்ட மோசமான மனநலப் பிரச்னைகள்
பெங்களூரில் குழந்தைகள் காப்பகத்தில், துன்புறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு மனநலப் பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டபிறகு, தங்களது குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்ததாகவும், ஆனால், அதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததன் மூலம், இதுதான் காரணமாக இருக்கலாம் என்று பெற்றோர் அஞ்சுகிறார்கள்.
குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தபிறகு, தன்னுடைய இரண்டரை வயது குழந்தைக்கு, கழிப்பறைகளைக் கண்டாலே பயம் ஏற்பட்டு, கழிப்பறைக்குச் செல்லவே அடம்பிடிக்கும் நிலை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இவர்களது பெற்றோர் இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். பணிக்குச் செல்லும் முன், இவர்கள் தங்களது குழந்தையை இந்த குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வது வழக்கமாம். எட்டு மாதங்களாக குழந்தை இங்குதான் விடப்பட்டுள்ளது.
அண்மையில்தான், பெங்களூரில் இயங்கி வரும் இந்த குழந்தைகள் காப்பகத்தில் விடப்படும் குழந்தைகளை, அங்கு வேலை செய்யும் பெண்கள் மிகக் கொடூரமாகத் துன்புறுத்திய விடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு காட்சியில், கழிப்பறைக்குள் தள்ளி கதவு சாத்தப்பட்ட நிலையில், தரையில் படுத்துக்கொண்டு, குழந்தை அம்மா அம்மா என கதறும் விடியோவைப் பார்க்கும் எவருக்கும் கண் கலங்கத்தான் செய்யும்.
இங்கு சேர்த்தபிறகு, தனது குழந்தைக்கு கழிப்பறை என்றாலே அச்சம் ஏற்பட்டு, மன நலப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது மூன்று வயது மகன், அவ்வப்போது, பெண்கள் குழந்தைகளை கடுமையாக திட்டுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறான் என்கிறார்கள் அவர்களது பெற்றோர்.
இந்த சம்பவத்தில், விடியோ ஆதாரத்தின் அடிப்படையில் விஜயலட்சுமி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், வாஷிங்மெஷினுக்குள் குழந்தைகளை அடைத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை கூறுகிறது.