உக்ரைனின் தாக்குதல்களில் 8,500 ரஷியர்கள் பலி! வெளியானது அதிர்ச்சி தகவல்!
உக்ரைன் உடனான போரில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8,500 ரஷியர்கள் கொல்லப்பட்டதாக, ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இருதரப்பும் 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ரஷியாவின் மாஸ்கோ மற்றும் உக்ரைனின் கீவ் ஆகிய நகரங்களின் மீது அதிகப்படியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2022 முதல் 2026 ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 30,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8,434 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷிய வெளியுறவு அமைச்சகம் நேற்று (ஜூலை 3) தெரிவித்துள்ளது.
இத்துடன், உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையே கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மோதல்களில் 373 குழந்தைகள் கொல்லப்பட்டதும், 1,845 குழந்தைகள் படுகாயமடைந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், 42 ரஷிய நகரங்களில் உள்ள மக்கள் கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைனின் படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இத்துடன், வெள்ளிக்கிழமை இரவு ரஷிய தலைநகர் உள்ளிட்ட நகரங்களை நோக்கி ஏவப்பட்ட 28 உக்ரைனிய ட்ரோன்களை ரஷிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.
இத்துடன், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கான்ஸ்டான்டினோவ்கா நகரத்தை ரஷிய படைகள் முழுவதுமாகக் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.