ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் மர்ம உயிரிழப்பு ; தற்கொலையா? கொலையா?
இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டம், கூடூர் மண்டலத்துக்கு உட்பட்ட அனந்தாயிபேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் ரஜினி (60), அவரது மகள் கவுரி (40) மற்றும் மருமகள் மதுபாலா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அவர்கள் மூவரும் தங்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவலறிந்த கூடூர் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மசூலிப்பட்டினம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பத் தகராறே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்தச் சம்பவம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இடம்பெற்ற கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.