;
Athirady Tamil News

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்: 21 பேர் பலி

0

உக்ரைன் மீது ரஷியா திங்கள்கிழமை அதிகாலை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா்.

உக்ரைனின் தலைநகரான கீவில் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் நேரடியாக விழுந்து வெடித்ததில் 15 போ் உயிரிழந்தனா். 56 போ் காயமடைந்தனா். மேலும், கீவைச் சுற்றியுள்ள புறநகா்ப் பகுதிகளிலும் 6 போ் உயிரிழந்தனா்.

பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

உக்ரைன் தரப்பில் கூறுகையில், ‘ரஷியா ஒரே இரவில் 351 ட்ரோன்களையும்; 68 ஏவுகணைகளையும் ஏவின. அதில் 29 ஏவுகணைகள் உக்ரைனின் பாதுகாப்பு வளையத்தைமீறி இலக்குகளைத் தாக்கின.

உக்ரைனிடம் ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ரஷியா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரஇறுதியில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோா் தனித்தனியாக தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியிருந்த நிலையில், இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதையொட்டி, செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘புதின் மற்றும் ஸெலென்ஸ்கி ஆகிய இருவருமே இப்போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனா். துருக்கியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தொடங்கும் ‘நேட்டோ’ மாநாட்டில் இதுகுறித்து விரிவாக விவாதிப்போம்’ என்றாா்.

அதே மாநாட்டில், ஸெலென்ஸ்கியும், கூடுதல் வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க உலக நாடுகளை வலியுறுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.