;
Athirady Tamil News

இந்தியாவில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்! ஏன்?

0

நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பான விளம்பரங்கள் தோன்றுவதாக மத்திய அரசுக்கு புகார் வந்தது. இது தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் முடக்குமாறு இன்ஸ்டாகிராமுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, இதுபோன்ற விளம்பரங்கள் எப்படி அங்கீகரிக்கப்பட்டு, தளத்தில் காட்டப்பட்டன என்பது குறித்து மெட்டா நிறுவனத்திடம் 7 நாள்களுக்குள் விரிவான விளக்கம் கோருமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“குழந்தைகளுக்கு எதிரான குற்றம் ஒரு கொடுமையான குற்றமாகும். ஒவ்வொரு நாளும், எங்கள் தளங்களிலும், அதற்கு வெளியேவும் இதுபோன்ற துஷ்பிரயோகத்தை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்படும் கணக்குகள், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் வெளியிடும் கணக்குகள் தொடர்புடைய உள்ளடக்கத்தை ஏஐ அமைப்புகள் மூலம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு வருகின்றது. ஹாஷ்-மேட்சிங் தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் தொழில்நுப்டம் போன்றவற்றையும் மெட்டா நிறுவனம் பயன்படுத்துகிறது.

இந்தாண்டின் முதல் பாதியில் மே மாதம் வரை, உலகளவில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் வெளியிடும் 40 லட்சம் கணக்குகளும் 3.6 கோடி உள்ளடக்கங்களையும் கண்டறிந்து அகற்றியுள்ளோம். இதே காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 1.6 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியாகும் விளம்பரங்கள் ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் பணியாளர்கள் மூலமும் முன்கூட்டியே ஆய்வு செய்யப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.