;
Athirady Tamil News

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை

0

அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால  பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம்  நெல் களஞ்சியசாலையில் இக்கொள்முதல் திட்டத் தொடக்க விழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான அனுபமா மங்கள விக்ரமாராச்சி மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதித் தலைவர் சம்பத் தௌலகல ஆகியோர் கலந்துகொண்டு நெல் கொள்முதலை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த பகுதியில் இரண்டு பிரதான நெல் களஞ்சியசாலைகள் அமைந்துள்ள போதிலும், தற்போது 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு களஞ்சியசாலை மாத்திரமே நெல் கொள்முதலுக்காகக் காலி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரவிருக்கும் நாட்களில் விவசாயிகளின் அறுவடை நிலவரங்களுக்கு ஏற்ப, அம்பாறை மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும் என மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இதுவரை 18 தனியார் களஞ்சியசாலைகள் நெல் சேமிப்புத் தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஏனைய களஞ்சியசாலைகளில் உள்ள பழைய இருப்புக்களை அகற்றுவதற்காக ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளிகள் (Tenders) கோரப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் காலி செய்யப்படும் என்றும் கூறினார்.

தற்போது 10,000 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடு அரசாங்க அதிபரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இக்களஞ்சியசாலைகளில் 14,000 மெட்ரிக் டன் வரையில் சேமிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இம்முறை விவசாயிகள் மிகச் சிறந்த தரமான நெல்லைக் கொள்முதலுக்குச் சமர்ப்பித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நெல் கொள்முதலின் போது இடம்பெறும் முக்கிய முறைகேடு குறித்து அரசாங்க அதிபர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சில விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தங்களுக்கு வழங்கப்படும் நெல் கொள்முதல் படிவங்களை (Forms) தனியார் வியாபாரிகளுக்குப் பணத்திற்காக விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார். இவ்வாறான முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு விவசாயப் பிரதிநிதிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதித் தலைவர் சம்பத் தௌலகல இங்கு உரையாற்றுகையில், இம்முறை யாலப் பருவத்தில் நாடளாவிய ரீதியில் 50,000 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்ய சபை இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதன் முதற்கட்டமாகவே அம்பாறை மாவட்டத்திலிருந்து 10,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே தயார் நிலையில் உள்ள 18 தனியார் களஞ்சியசாலைகளுக்கு மேலதிகமாக, நெல் சந்தைப்படுத்தல் சபையினால் பழைய அரிசி இருப்புகள் விடுவிக்கப்பட்ட பின்னர் ஏனைய கிடங்குகளும் காலியாகிவிடும் என்பதால், நெல் சேமிப்புத் தொடர்பாக எவ்விதப் பிரச்சினையும் எழாது என அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் துஷாரா பெரேரா, நெல் சந்தைப்படுத்தல் சபையின் அம்பாறை பிராந்திய மேலாளர் சுரங்க சேனநாயக்க மற்றும் உள்ளூர் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.