ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றி நிர்வகிப்போம்: டொனால்ட் டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தெரிவித்த நிலையில் அதனைக் கைப்பற்றுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றி, அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்கு வரி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவன நேர்காணலில் பேசிய டிரம்ப், “நாங்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுகிறோம். நாங்கள் அதனை நிர்வகிக்கவுள்ளோம். அங்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாங்கள் பணம் வசூலிப்போம். நாங்கள் ஹோர்முஸை நிர்வகித்தால், அமெரிக்காவிற்கு அந்தப் பணம் திரும்பச் செலுத்தப்படும்” எனப் பேசினார்.
ஈரான் நிலைகள் மீது சமீபத்தில் அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திவரும் வேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
மேலும், “தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் மிகவும் பலவீனமடைந்துள்ளது. அவர்களிடம் ஒன்றுமில்லை. அவர்கள் என்னிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஈரான் தனது ராணுவத் திறனை மீண்டும் கட்டியெழுப்புவது சாத்தியமற்றது” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரானை தொழில்முறை பேச்சுவார்த்தையாளர்கள் எனக் குறிப்பிட்ட டிரம்ப், அவர்கள் தன்னிடமிருந்து சலுகைகளைப் பெறத் தவறியதாகக் கூறினார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து உலகளவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.