ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது! டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை திறந்தேதான் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜூலை 13) தெரிவித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை அறிவித்தது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது, திறந்தே இருக்கும். ஈரான் மீதான முற்றுகையை மீண்டும் அமல்படுத்துகிறோம். ஈரானின் கப்பல்கள் உள்ளே நுழைந்தால் தடுப்போம்.
மற்ற அனைத்து நாடுகளும் ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி பயன்படுத்தலாம். இனிமேல், அமெரிக்கா “ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலர்” என்று அழைக்கப்படும்.
அந்த வகையில், ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கவும் இயக்கவும் தேவையான அனைத்து செலவுகளுக்கும் அதன் வழியே செல்லும் பொருள்களுக்கு 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். இதற்கான நடைமுறை உடனடியாகத் தொடங்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.