இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் ஆலோசனை!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் மம்தானி ஆலோசனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நெதன்யாகுவை கைது செய்ய ஆலோசனை
ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் குறித்து நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேயரின் சட்ட அமலாக்க அதிகாரம் தொடர்பான எல்லைகளைத் தீர்மானிக்க, நியூயார்க் நகர சட்ட ஆலோசகர்களுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக மேயர் மம்தானி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய மம்தானி, “நியூயார்க் நகரில் சட்டம் எங்களுக்கு என்ன செய்ய அனுமதி அளிக்கிறதோ, அதை நாங்கள் செய்வோம். அதற்காக எங்களுக்கான சொந்த சட்டங்களை எழுதப் போவதில்லை. தற்போதையை நிலைமையைக் கையாளுவதற்காக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
மேலும், சர்வதேச நீதித்துறை பற்றிப் பேசிய அவர், “பிரதமர் நெதன்யாகு ஹாக் நகரில் இருக்க வேண்டியவர் என நான் நம்புகிறேன். அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க் குற்றவாளி” என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹாக் நகரில் அமைந்துள்ளது.
அவரது இந்த நிலைப்பாடு பற்றி விளக்கமளித்த மம்தானி, “கடந்த பல ஆண்டுகளாக அவருடைய செயல்கள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாக, உலகளவில் பொதுமக்கள் பலரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக மம்தானி இவ்வாறு பேசியுள்ளார்.
இஸ்ரேலின் இரு போர்க்குற்றவாளிகள்
காசாவில் இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலின் இரு மூத்த தலைவர்களும் போர்க் குற்றங்களைச் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிடிவாரண்டுகளின் சட்டக் கட்டமைப்பு குறித்து விரிவாக விளக்கிய நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை, போரின் ஒரு உத்தியாக பட்டினியைப் பயன்படுத்தியதற்கான குற்றவியல் பொறுப்பை இரு தலைவர்களும் ஏற்றுக்கொள்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் சுட்டிக்காட்டியுள்ளது.
போரின் ஒரு உத்தியாக பட்டினியைப் பயன்படுத்தி முற்றுகையிடப்பட்ட காஸாவின் பகுதிகளுக்குள் நுழையும் உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து, மின்சாரம் போன்ற அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளைத் தடுத்ததே இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையாகும்.
இதுகுறித்து விரிவாக விளக்கிய நீதிமன்ற அறிக்கை, இஸ்ரேலின் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்க நியாயமான காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்துத் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலை, துன்புறுத்தல் மற்றும் பல்வேறு மனிதாபிமானமற்ற செயல்கள் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ளன.