இந்த ஆண்டுக்குள் 30,000 ஆசிரியர் நியமனங்கள் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இந்த ஆண்டு பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 120,000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த நியமனங்களில் 30,000 நியமனங்கள் ஆசிரியர் சேவையில் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகின்றது. பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் வெற்றிடங்கள் தாமதமின்றி நிரப்பப்படும்.
பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்கள்
நாட்டில் தற்போது பொதுச் சேவையில் சுமார் 350,000 வெற்றிடங்கள் உள்ள நிலையில் 120,000க்கும் மேற்பட்ட பதவிகளுக்கான நியமனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் மீதமுள்ள அனைத்து பொதுச் சேவை வெற்றிடங்களையும் நிரப்புவதற்காக, தகுதியான விண்ணப்பதாரர்களை படிப்படியாக நியமிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்“ என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.