தீவகம் சிவில் சமூகம் உபதலைவருக்கு நீதிமன்றத்தில் கொலை மிரட்டல்
தீவகம் சிவில் சமூகம் உபதலைவருக்கு நீதிமன்றத்தில் கொலை மிரட்டல்
கடந்த 13 ஆண்டுகளாக தீவகத்தில் சட்டவிரோத குற்றச் செயற்பாடுகளை தடுப்பதற்காக போராடி வருகின்ற தீவகம் சிவில் சமூகம் ( Islands Civil Society ) அமைப்பின் உப தலைவராகவும் முன்னணி சமூக செயற்பாட்டாளராகவும் செயற்படுகின்ற திரு. கருணாகரன் குணாளன் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்குள் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
2023 ம் ஆண்டு நெடுந்தீவில் ஆறு முதியவர்களை ஒரே இரவில் கோரமாக வெட்டிக்கொலை செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சபாரத்தினம் ரகுநாதன் ( ரகு ) என்பவரும், 2025 ஆம் ஆண்டு புங்குடுதீவு பிரதேசத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் நர்மதன் மற்றும் அனலைதீவு செல்வகுமார் என்கின்ற நபர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்துக்குள் கொலை மிரட்டல் விடுத்ததாக திரு. க. குணாளன் ஊர்காவற்துறை நீதிமன்ற கௌரவ நீதிபதியிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பேருந்து உரிமையாளர் அகிலன் படுகொலையை கண்டித்து புங்குடுதீவு பெற்றோல் நிரப்பு நிலையம் முன்பாக நடைபெற்ற வீதி மறிப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களின் சகோதரரும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் தீவகம் சிவில் சமூகம் தலைவருமான திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன், தீவகம் சிவில் சமூகம் உப தலைவர் திரு.க. குணாளன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு.கருணாகரன் நாவலன் மற்றும் இரு பொதுமக்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வழக்குக்காக சமூகமளித்திருந்த நிலையிலேயே இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக திரு. க. குணாளன் நீதிமன்றத்தில் நேரடியாக தெரிவித்திருந்தார்.
விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக கண்ணுற்றதாக திரு.மா. இளம்பிறையன், திரு.க. நாவலன் ஆகியோரும் சாட்சியமளித்திருந்தனர்.
பின்னர் நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு இணங்க நீதிமன்ற பொலிசார் இச்சம்பவம் குறித்து குணாளன் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.
நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களில் நடைபெற்ற குறித்த படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு திரு. கருணாகரன் குணாளன் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்ததாகவும் அதற்காக தொடர்ச்சியாக துரித செயற்பாடுகளை அவர் முன்னெடுத்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
