எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!
பனாமா கால்வாயில் எல் நினோ பாதிப்பு காரணமாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்து குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் குறைக்க பனாமா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேல்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிகளவில் வெப்பமாவதால் ஏற்படும் காலநிலை மாற்றம் எல் நினோ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலநிலை மாற்றம் ஏறத்தாழ 7 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும், இந்தக் காலங்களில் சராசரி அளவைவிட 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும், பருவமழை குறையும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
எல் நினோ காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து, நாடு தழுவிய அவசரநிலையை பனாமா அறிவித்துள்ளது.
மேலும், இந்த நிலைமை காரணமாக மத்திய அமெரிக்காவில் கடுமையான வறட்சி பாதிப்பு சூழல் உருவாகியுள்ளதால், இரு கண்டங்களுக்கு இடையேயான பனாமா கால்வாய்க்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
உலக வர்த்தகத்தின் 5%, பனாமா கால்வாய் வழியே நடைபெறுகிறது. பனாமா கால்வாயில், கப்பல்களைத் தங்கள் பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் மேலே தூக்கவும் கீழே இறக்கவும் உதவும் நீர்மடைகளை இயக்க அதிகளவு நீர் தேவைப்படும். அதற்கான, நீர் இல்லாமல் இந்த நீர்வழிப்பாதையால் இயங்க முடியாது.
பனாமா நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு பட்ஜெட்டில், காலநிலை மாற்றம் காரணமாக நீரைச் சேமிக்கும் நோக்கில் பனாமா கால்வாயில் செப்டம்பர் 4 முதல், நாள்தோறும் செல்லும் கப்பல் போக்குவரத்தின் எண்ணிக்கையை 36-லிருந்து 32-ஆக அதிகாரிகள் குறைத்தனர்.
இது, வருகிற அக்டோபர் மாதம் முதல் ஒரு நாளைக்கு சராசரியாக 29.5 என மேலும் குறைக்கப்படவுள்ளது.
இதன்மூலம், பனாமா கால்வாய் பாதுகாப்பாகவும், தொடர்ச்சியாகவும், லாபகரமாகவும் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்துள்ளதாக, பனாமா கால்வாய் விவகாரங்கள் துறை அமைச்சர் ஜோஸ் ரமோன் யகாசா தெரிவித்தார்.
இந்த ஆண்டில் எல் நினோ பாதிப்பு மிக மோசமாக இருக்குமென கூறப்படுகிறது. கடந்த 2023-ல் எல் நினோ பாதிப்பு காரணமாக பனாமா கால்வாயில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை 38-இல் இருந்து 22-ஆக குறைக்கப்பட்டது.
Advertise with us
ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், பனாமா கால்வாய் வழியே போக்குவரத்து அதிகரித்துள்ளது.