;
Athirady Tamil News

30 ஆண்டுகளாக எவரெஸ்டில் உறைந்த ‘கிரீன் பூட்ஸ்’ வீரரின் உடலை மீட்க தீவிர முயற்சி

0

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில், பனியில் கடந்த 30 ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படும்”கிரீன் பூட்ஸ்” என்று அறியப்படும் இந்திய மலையேறு வீரர் டோர்ஜே மோருப்பின் உடலை மீட்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

1996 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துவிட்டு இறங்கும் போது ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த இந்திய வீரர் டோர்ஜே மோருப்பின் பிரகாசமான பச்சை நிற மலையேற்ற பாதணிகளே பல ஆண்டுகளாக அந்தப் பாதையில் செல்பவர்களுக்கு ஒரு சோகமான அடையாளச் சின்னமாக இருந்து வந்துள்ளது.

நீண்ட காலமாக இந்த பாதணி மற்றொரு வீரரான த்சேவாங் பால்ஜோருக்கு சொந்தமானது என்று கருதப்பட்டது.

இருப்பினும், 1996ஆம் ஆண்டு குறித்த சம்பவத்தில் தப்பியவர்களின் சாட்சியங்கள் மற்றும் ஆடை அமைப்புகளின் அடிப்படையில் இது மோருப்பினுடையது என்று தற்போது அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் 8,500 மீட்டர் உயரத்தில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் -40 டிகிரி குளிர் நிலவும் “இறப்பு மண்டலத்தில்” இந்த மீட்புப் பணி நடைபெறவுள்ளது.

திபெத் (சீனா) பகுதியில் இந்த உடல் புதையுண்டுள்ளமையால், உலங்கு வானூர்திகள் மூலம் எளிதில் மீட்கும் வசதிகள் அங்கே இல்லை.

இதன் காரணமாக, பனியில் உறைந்து கடினமான நிலையில் இருக்கும் உடலைச் சுமந்து இறங்குவதற்கு 10 முதல் 12 திறமையான மலையேறுபவர்கள் தேவைப்படுவார்கள்.

இந்த மீட்புப் பணிக்கு 40,000 முதல் 80,000 டொலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, உடலை லடாக் பகுதிக்கு கொண்டுவந்து லே நகரில் உள்ள தியாகிகள் பூங்கா அருகில் இறுதிச் சடங்குகளை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க “கிரீன் பூட்ஸ்” பாதணிகளை தங்கள் குடும்ப நினைவாகப் பாதுகாக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.