நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம்
நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த ஐந்து மாணவர்களுக்குப் பணப்பரிசுகளும், பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (07) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நற்பிட்டிமுனை ‘நண்பர்கள் வட்டம்’ சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் எம். எல். பதியுதீன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மாணவர்களைச் சிறப்பாக வழிநடத்திக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக நற்பிட்டிமுனை நண்பர்கள் வட்டம் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம். ஐ. நிரோஸ் (ஜே.பி.), செயலாளர் ஆசிரியர் ஐ.எம். ரிபான் (ஜே.பி.) மற்றும் பொருளாளரும் நற்பிட்டிமுனை ‘கிமாஸ் மல்டி சென்டர்’ நிறுவனத்தின் பணிப்பாளருமான ஆர். லதீப் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வைத்தனர்.
மேலும், பாடசாலையின் ஆரம்ப மற்றும் உயர்பிரிவு மாணவர்கள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
