;
Athirady Tamil News

வெள்ளத்தில் கிடைத்த பொருள்களை விற்றால் சட்ட நடவடிக்கை: நேபாள காவல்துறை எச்சரிக்கை!

0

நேபாள வெள்ளப்பெருக்கின்போது கண்டெடுக்கப்படும் மதிப்புமிக்க பொருள்களை வைத்துக்கொள்ளவோ, விற்கவோ கூடாது என நேபாள காவல்துறை எச்சரித்துள்ளது.

ஆகஸ்ட் 26 அன்று திபெத் – நேபாளம் வெள்ளப் பேரழிவில் 1,400-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகளில் பல்வேறு நாடுகளும் இணைந்துள்ள நிலையில் 13-வது நாளாக மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கின்போது கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ளவோ, விற்கவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என்றும், அவற்றை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் நேபாள காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தகைய பொருள்கள் அல்லது முக்கிய ஆவணங்களைக் கண்டெடுப்பவர்கள், அதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து, அவற்றை உரிய உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதிப்புமிக்க பொருள்களைப் பயன்படுத்துவது, மறைத்து வைப்பது, வைத்துக்கொள்வது, வாங்குவது விற்பது ஆகியவை சட்டவிரோதச் செயலாகும். இவை சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை காவல்துறை எந்தவொரு குறிப்பிட்ட சம்பவத்துடனும் நேரடியாக இணைத்துக் கூறவில்லை, என்றாலும் தடிங் மாவட்டத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வங்கிப் பாதுகாப்புப் பெட்டியை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் 29 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.