;
Athirady Tamil News

உயிரை மாய்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை சமூகத்தில் குறைப்பதுதான் எங்களுடைய நோக்கம் – சுமித்ரயோ

0

சமகால சமூகப் பிரச்சினைகளில் உயிர்மாய்ப்பு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. உயிர் மாய்ப்பு நிகழாத காலமோ சமூகமோ உலகில் எங்கும் இல்லை. உயிர் மாய்ப்பில் ஈடுபடுவதானது ஒரு தனிமனிதனது செயலாகக் காணப்பட்டாலும் அது ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இதன்படி ஒரு மனிதன் பிரச்சினையை எதிர்நோக்குகின்றபோது, அப்பிரச்சினைக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கிறான். இதனால்தான் உயிர்மாய்ப்பு தடுப்பு முறையானது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

உயிர்மாய்ப்பு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சுமித்ரயோ அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் இருவர் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வி வருமாறு…………

01.எமது நாட்டில் உயிர் மாய்ப்பு பாதிப்பு எந்த அளவில் உள்ளது?

பொலிஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்திற்கமைய 2022 ஆம் ஆண்டு 3406 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு 09 தொடக்கம் 10 பேர் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தேசிய மனநல நிறுவனத்தின் ஆராய்ச்சியின் புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் உள்ள சனத்தொகையில் ஒரு இலட்சம் பேரில் 15 பேர் உயிர்மாய்ப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு, 10 பேர் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வி அடைகின்றாா்கள். இந்த சம்பவங்கள் அவர்களை சார்ந்தவர்களையும் பாதிக்கின்றது.

02.உயிர்மாய்ப்பு நிகழ்வதற்கு காரணம் என்ன?

உயிர்மாய்ப்பு நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை சொல்ல முடியாது. ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டால் ஏன் இவ்வாறு செய்தார் என்பது தான் எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வி. ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள இறுதியாக என்ன காரணமாக இருந்ததோ அதுதான் காரணம் என்று எல்லோரும் நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் அவர் அந்த நிகழ்வு நடப்பதற்கு முதலே அவருடைய உடல், உள, சமூக, பொருளாதார, உறவுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் போன்ற காரணிகளால் அவர் போராடிக்கொண்டு இருந்திருக்கக்கூடும். இவ்வாறு போராடிக்கொண்டிருந்த சூழ்நிலையில் இறுதியாக நடந்த ஒரு நிகழ்வினால் தான் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். ஆகவே, நாங்கள் உயிர் மாய்ப்புக்கு, ஒரு காரணம் மாத்திரம் இருக்கலாம் என குறிப்பிடமுடியாது. எல்லோரும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். எல்லோரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பதும் இல்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் இல்லை. ஒரு சிலர் தான் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

அவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்வதற்கு 3 முக்கிய காரணிகள் ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

01.பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சமாளிக்கக்கூடிய திறமை எல்லோருக்கும் இருப்பதில்லை.

02.உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கும் குணநலம்.

03.அவர்களுக்கு தெரியாமல் மனநலம் பாதிக்கப்படுதல். பெரிதளவானதோ, சிறிதளவானதோ பாதிப்போடு போராடுவது முக்கிய காரணியாக உள்ளது.

அதை விட வாழ்க்கையில் திடீரென நிகழும் விடயங்கள். நெருங்கிய ஒருவரை அல்லது தொழில், பணம், சொத்து போன்றவற்றை திடீரென இழக்கும்போது அதற்கு அவர்கள் சமாளிக்க முடியாமல் போகும் ஒரு முடிவாக இருக்கலாம்.

03.இவ்வாறான இழப்புகள் இடம்பெறும்போது நாம் என்ன செய்யவேண்டும்?

யாராவது ஒருவர் ஒரு இழப்பில் இருந்தால் “ஐயோ பாவமே” என குறிப்பிடுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், அவர்களுக்கு மேலதிகமாக அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கு என்ன செய்யலாம்? முக்கியமாக இழப்பு நேரிட்டால் மனதளவில் கஷ்டமான விடயமாகத்தான் இருக்கும். எனவே அதிலிருந்து விடுபட எங்களோடு வந்து கதைக்கலாம்.

இழப்பினால் ஏற்பட்ட வேதனையை தாங்க முடியாமல்தான் அந்த முடிவை எடுக்கின்றார்களே தவிர அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை. அதிலிருந்து தப்பிக்க ஒரு வழியாக செயற்படுகிறார்கள். ஒருவர் கஷ்டப்படும்போது ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என கேட்கவேண்டும். அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும்.

04. உயிர் மாய்ப்பை தடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். எங்கள் சுமித்ரயோ அமைப்பின் முக்கிய நோக்கமே சமூகத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைப்பது தான்.

ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலையில் இருக்கிறார் என்றால் அவருடன் அக்கரையாக பேசி புரிதலுடன் செவிமெடுத்தால் அவர்களின் மனதிலுள்ள பாரம் குறையும். அவர்களும் பிரச்சினைகளும் ஒரு இருட்டு அறைக்குள் இருப்பது போன்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களுடன் வேறொருவர் பேசினால் மனதில் இருக்கின்ற அனைத்து சுமைகளையும் இறக்கியவுடன் அவங்களுக்கே தெளிவு வரும். வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரும். எங்களை போன்ற அமைப்புகளிடம் அவர்களை தொடர்புபடுத்தி கொடுக்கலாம். அப்படி செய்தால் உயிர் மாய்ப்புகள் தவிர்க்கப்படலாம்.

05. உயிர் மாய்ப்பு தடுப்பில் சுமித்ரயோ அமைப்பின் பங்களிப்பு என்ன?

எங்களிடம் வருபவர்கள் பாரிய பிரச்சினைகளை தலையில் சுமந்துகொண்டுதான் வருவார்கள். அவ்வாறான சூழ்நிலைகளில் இந்த பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வும் இல்லாத மாதிரிதான் அவர்களின் மனநிலை இருக்கும். அப்போது நாங்கள் பொறுமையோடு நிதானமாக, எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அவர்களின் கதைகளை கூறச் சொல்வோம். அதை கூறும்போது அவர்கள் பெரிய ஆறுதல் அடைவார்கள். அப்போது, பிரச்சினை மாறாது. ஆனால் அந்த பிரச்சினையை பார்க்கும் விதம் மாறிவிடும். ஏனென்றால் அவர்களின் கதையை பொறுமையாக செவிமடுக்க, ஒரு தீர்வும் சொல்லாமல் கேட்பதற்கு சமூகத்தில் ஒருவரும் இல்லை. ஆனால் நாங்கள் அதனைத்தான் செய்கிறோம். நிதானமாக அவர்களின் கதைகளை செவிமடுக்கின்றோம். அது மாத்திரமல்ல, எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் எந்த விதமான அறிவுரையும் கொடுப்பதில்லை. விமர்சனம் ஒன்றும் செய்வதில்லை. அதற்கு ஒரு காரணம் அவர்களின் பிரச்சினைகளை அவர்கள் தான் தீர்க்க வேண்டும்.

ஆனால், நாங்கள் அவர்களின் நிலைவரத்தை விளங்கிக்கொள்ளவும். அந்த நிலைவரத்தை இன்னொரு விதத்தில் பார்ப்பதற்கும், சமாளிப்பதற்கும் நாங்கள் அவர்களுக்கு உதவியாக இருப்போம். ஏனென்றால் அவர்களுக்கு அந்த பிரச்சினைகளுக்கு இன்னொரு முறை கதைக்க வேண்டும் என்றால் எங்களிடம் வரமுடியும்.

எங்களிடம் வருபவர்களின் கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளது. ஆனால், அந்த உணர்வு அந்த நேரத்தில் அவர்களுக்கு அந்த பிரச்சினையை பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்களின் தலை உணர்வாக தான் இருக்கும். நாங்கள் அவர்களுடன் கதைக்கும் போது அவர்களின் பிரச்சினை மூலம் உணர்வுகளை விளங்கிக்கொள்கிறோம். அவர்கள் கதைக்கும் போது அவர்களின் தலை தெளிவாகும். அதனால் அந்த பிரச்சினையை வேறு விதமாக பார்க்க முடியும். அந்த தெளிவூணர்வுதான் அவ்விடத்தில் நடக்கின்றது.

நாங்கள் அவர்களின் பிரச்சினைகைளை கவனமாக கேட்டுக் கொள்வோம். அவர்களுக்கு எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் கேட்டுக் கொண்டு இருப்பதால் அவர்களுக்கு ஒரு சுதந்திரம் மற்றும் பாரிய பாரத்தை இறக்கியது போன்ற உணர்வு ஏற்படும்.

எங்களிடம் வருபவர்கள் அவர்களை பற்றி எந்தவொரு விபரத்தையும் சொல்லத் தேவையில்லை. அவர்களின் பெயர் சொல்ல தேவையில்லை. அவை எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை.அவர்கள் சொல்லும் கதைகள் எங்கள் அமைப்பை தவிர வேறு எங்கும் வெளியில் செல்லாது. அதனால் தான் மக்கள் எங்களிடம் வந்து பேசுகிறார்கள்.

07.இவ்வாறு உங்களிடம் வந்து கதைத்து விட்டு போகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

அவர்கள் சில நேரம் எங்களை விழுந்து வணங்குவார்கள். அதற்கு காரணம் அவ்வளவு தெளிவு கிடைக்கிறது. வருடக்கணக்காக அவர்களுக்கு இருந்த பிரச்சினை மூலம் அவர்கள் அடையும் நிம்மதி வார்த்தைகளால் சொல்ல முடியாது.

08. உயிர்மாய்ப்பு தடுப்பில் சமூகம் எவ்வாறு உதவ முடியும்?

எங்களுக்கு இருக்கிற உணர்வு, பிரச்சினைகள் ஒரு மனநோய் என எமது சமூகத்தில் பிழையான கருத்து உள்ளது. அது ஒரு பிழையான ஒரு விமர்சனம். அது மாற வேண்டும். எங்கள் உடம்பில் நோய்கள் ஏற்படுவது போன்று எங்களின் மனதிலையும் தலையிலையும் நோய்கள் ஏற்படலாம். அப்போது நாங்கள் உடல் பிரச்சினைக்கு வைத்தியரிடம் போக வேண்டும் என்றால் இதற்கும் யாருடையாவது போய் கதைத்தால் தான் தீர்வு என்றால் அதை ஏன் நாங்கள் ஒரு பாரிய பிரச்சினையாக கருத வேண்டும். அப்படி கருத தேவையில்லை.

கூடுதலாக இந்த பிரச்சினைகளுக்கு காரணம் எங்களுடன் இருப்பவர்கள் எங்களின் கதைகளை கேட்பதில்லை. கேட்பது மாத்திரமல்ல அவர்களின் கதைகளை சரியாக புரிந்து கொண்டு அதற்கு தீர்வு சொல்லாமல் கூர்ந்து கவனிப்பதும் இல்லை. அதனால் அவர்கள் எங்களிடம் வருகிறார்கள்.

அதனால் நாங்கள் சமூகத்துக்கு சொல்வது என்னவென்றால், உங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அல்லது உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் சோகமாக இருந்தால் கேளுங்கள். கொஞ்சம் மற்றைய மனிதர்கள் பத்தி யோசியுங்கள். அந்த கேள்வியை கேட்பதால் தெளிவு பெறுவார்கள். கையடக்கத் தொலைபேசி பாவனை மனிதர்களிடம் இருந்து எம்மை தனிமையாக்கும். எங்களுக்கு ஏனையவர்களுடனான தொடர்பு முழுமையாக குறையும். எனவே மனம் விட்டு பேச வேண்டும். மனம் விட்டு பேசுவதற்காக சூழ்நிலையை நாங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உயிர்மாய்ப்பை தடுக்கக்கூடியது அனைவரின் பொறுப்பு.

09. உயிர்மாய்ப்பு எண்ணம் கொண்ட ஒருவரை அடையாளம் காண்பது எப்படி?

ஒருவர் தங்களை தனிமைப்படுத்த பார்ப்பார்கள். பேசும்போது தனக்கு யாரும் இல்லை. தனிமையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாத மாதரி, வாழ்ந்து என்ன பிரயோசனம். என்னால் எந்த பிரயோசனமும் இல்லை. நான் உதவாக்கரை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். எவற்றிலும் ஒரு நம்பிக்கை இருக்காது. எதையுமே சாதிக்க முடியாது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நாம் அடையாளம் காணலாம்.

அவர்களை தடங்கல் செய்யும் ஒரு பிரச்சினையை முடிவே இல்லாத பிரச்சினையை திருப்பி திருப்பி பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களுக்கு பிடித்த மற்றும் பொக்கிஷமாக வைத்திருந்த விடங்களை மற்றையவர்களுக்கு கொடுப்பார்கள்.

அவர்கள் வாழ்க்கையை முடித்து கொள்ள தயார் செய்வார்கள். தற்போது உள்ள பிள்ளைகள் கூகுள் மற்றும் சமூக ஊடகங்களில் எப்படி உயிரை மாய்த்து கொள்ளலம் என்ற தகவல்களை தேடுகிறார்கள்.

அதை பற்றி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் ஏதாவது ஒரு சந்தேகம் எழுந்தால் உடனடியாக சுற்றி இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்ய தேவையில்லை. என்னது? ஏன் இப்படி செய்கின்றீர்கள்? ஏன் தேடுகின்றீர்கள், என்ன காரணம்? என கேட்டால் போதும். இவ்வாறு அவர்கள் ஒவ்வொரு விடயங்களை செய்வது தனக்கு யாரும் உதவி செய்ய மாட்டாங்களா? என கேட்க வழியில்லை. அவை அனைத்தும் ஒரு வகையான அழுகை.

10. உயிர்மாய்ப்பு தோற்றுவிக்கக்கூடிய சூழ்நிலைகள் என்ன?

இழப்பு, உறவுகளில் விரிசல், பாடசாலை மாணவர்களால் தாழ்த்தப்படுவதால் மனதளவில் பாதிக்கப்படுதல், கஷ்டப்படுத்துதல், வாழ்க்கையில் தாங்கமுடியாத அதிர்ச்சி தரக்கூடிய செயல், இழப்புகளை தாங்கி கொள்ள முடியாமல் மனதில் வைத்து கொண்டு இருத்தல், நோய்கள், பயம், குடும்பத்தில் ஒருத்தர் உயிரை மாய்த்து கொண்ட சூழ்நிலை இருந்தால் இந்த சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். இவ்வாறான சூழ்நிலைகளில் இருப்பவர்களிடம் அருகில் இருப்பவர்கள் மனம் விட்டு பேச வேண்டும்.

11.சுமித்ரயோ அமைப்பை எவ்வாறு தொடர்பு கொள்வது?

சுமித்ரயோ அமைப்பு வருடத்தில் 365 நாட்களும் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 8.00 மணிவரைத் திறந்திருக்கும்.(விடுமுறை நாட்கள் உட்பட)

தொடர்பு எண்: சுமித்ரயோ – 011-2692909,011- 2683555,011- 269666

முகவரி : 60பி, ஹோட்டன் பிலேஸ், கொழும்பு 7 (சுமித்ரயோ)

மின்னஞ்சல்: [email protected] / [email protected]

இணையத்தளம்: www.sumithrayo.org

12. சுமித்ரயோ அமைப்பின் சேவைகள் என்ன?

நாங்கள் நட்புடன் செவிமெடுக்கின்றோம் (with friendly). உயிர்மாய்ப்பு தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நாளாந்தம் வாழ்க்கையில் அழுத்தங்கள் அதாவது, உயிர் மாய்ப்பு அல்லாத பல பிரச்சினைகளுக்கு எங்களை நாடி வருபவர்களுக்கு திறன் விருத்தி நிகழ்வுகள் செய்கின்றோம்.

13.சுமித்ரயோ அமைப்புக்கு எந்த வயதுடையவர்கள் வருகை தருகிறார்கள்?

20 வயதுக்கு மேற்பட்டவர்களும் வயது கூடியவர்களும் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது பாடசாலை பிள்ளைகளும் வருகை தருகிறார்கள். அவர்களை பெற்றோர்கள் அழைத்து கொண்டு வருகிறார்கள். உயர் தர மாணவர்கள், புலமை பரீட்சைக்கு தோற்றுவிக்கும் பிள்ளைகளும் வருகிறார்கள். மன அழுத்தத்தில் தூக்குவதில்லை. படிக்கிறார்கள் இல்லை என பெற்றோர் தெரிவிக்கிறார்கள். வயது எல்லைகள் இன்றி அனைவரும் வருகிறார்கள். முன்று நான்கு வருடங்களாக சிறுவர்கள் வருவது அதிகரித்துள்ளது. தற்போது கையடக்க தொலைபேசி போன்ற பாவனைகள் அதிகரித்துள்ளமை, படிப்பு, மற்றைய விடயங்களுக்கு நேரத்தை சமாளிக்க அவர்களுக்கு தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.