;
Athirady Tamil News

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி…!!

0

தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று சூலூர் விமானப்படை தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் சூலூரில் இருந்து ராணுவ விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன.

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் இன்று இரவு 8 மணியளவில் டெல்லி வந்தடைந்தன. பாலம் விமானப்படை தளத்தில் அவர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள்

நாளை காலை பிபின் ராவத் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிபின் ராவத் வீடு பாராளுமன்றம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை அடுத்து இருக்கிறது. அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலிக்கு பிறகு பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் காமராஜ் ரோடு வழியாக டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு முழு அரசு மரியாதையுடன் 2 பேரின் உடல்களும் தகனம் செய்யப்படும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய மோடி

இதேபோல விபத்தில் பலியான மற்ற ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கும் டெல்லியில் மரியாதை செலுத்தப்படுகிறது. அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.