;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – மேலும் 5 பேருக்கு பிணை!!

0

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேர் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்களை தொடர்ந்து மே 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் மற்றும் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் 4 வெவ்வேறு இலக்கம் கொண்ட வழக்குகளை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ஏனைய 60 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட 9 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இதில் 5 பேரை தலா ஒருவருக்கு 50 இலச்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், மாதாந்தம் 2 ஆம் மற்றும் 3 ஆம் கிழமைகளில் உள்ள ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொழுத்து இடுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.

இதேவேளை ஏனைய 55 பேரையும் தொடர்ந்து மே மாதம் 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் நீதவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.