;
Athirady Tamil News

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து மக்கள் போராட்டம்!! (படங்கள்)

0

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து மக்கள் போராட்டம்

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (20.05.2022) காலை 9.45 மணியளவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அப்பாதையூடான போக்குவரத்து 15 நிமிடங்கள் வரை ஸ்தம்பிதமடைந்திருந்தது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக எரிவாயு இல்லாமையினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (20.05.2022) காலை தொடக்கம் மாவட்டத்தில் இரு இடங்களில் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு விநியோகஸ்தர் நிலையத்திலும் அதிகாலை தொடக்கம் எரிவாயுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

எனினும் பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள குறித்த எரிவாயு விநியோகஸ்தர் நிலையத்தில் இன்று எரிவாயு வழங்கப்படமாட்டது என தெரிவித்த நிலையில் கோபமுற்ற மக்கள் ஏ9 வீதியில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலமையில் வருகை தந்த பொலிஸார் வீதியிலிருந்த எரிவாயு சிலிண்டர்களை அகற்றியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் களைத்தனர். இதன் போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையே வாக்குவாதமும் இடம்பெற்றிருந்தது.

குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து 15 நிமிடங்கள் வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் குறித்த நிலையத்தில் இன்று எரிவாயு வழங்கப்படமாட்டது எனவும் மக்களை களைந்து செல்லுமாறு பொலிஸார் தெரிவித்தமையினையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.