;
Athirady Tamil News

வட மாகாண கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டம்.. ஆளுநர் தெரிவிப்பு!!

0

வட மாகாணத்தில் உள்ள உற்பத்தி கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டங்களை உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை யாழில் உள்ள வட மாகாண ஆளுநர் தலைமைச் செயலகத்துக்கு முன்னாள், கைத்தொழில் திணைக்களமும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து வடமாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்த கைத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கண்காட்சிப்படுத்தலும் விற்பனை நிகழ்வை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கில் கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க ஆளுநர் செயலகம் தயாராக இருக்கின்ற நிலையில் அதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

யாழ் மாவட்டத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு யாழ்ப்பாண புதிய பேருந்து நிலையம், புகையிரத நிலையம் ஆகியவற்றில் கைத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

அது மட்டுமல்லாது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பித்தவுடன் சுற்றுலா பயணிகளை கவரும் முகமாக உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே வட மாகாணத்தில் உள்ள உற்பத்தி கைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கவும் சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.