;
Athirady Tamil News

அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல்

0

பெய்ரூட்

அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் போரின் ஒரு பகுதியாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஈரானுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டு பதிலடி கொடுக்கப்பட்டது.

படைகள் வாபஸ்
இந்த சூழலில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆயுத பயன்பாட்டை கைவிட்டால், தெற்கு லெபனானில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படும் என இஸ்ரேல் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற முடிவாகி, ரோம் நகரில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல மாத தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியுடன் இந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், தெற்கு லெபனானிலுள்ள ஹத்ததா நகர் மீது நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஹிஸ்புல்லா தாக்குதல்
வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தாக்குதல் நடத்தியது. இதனை குற்றச்சாட்டாக தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்த வேண்டும். அப்படி இல்லையெனில், பெய்ரூட்டை இலக்காக கொண்டு எங்களுடைய படைகள் தாக்குதல் நடத்தும் என கடுமையாக கூறினார்.

அவர் டிரம்ப்புடன் பேசியது பற்றி கூறும்போது, அவரிடம் நான் பேசினேன். அப்போது, எங்களுடைய நகரங்கள் மீதும், குடிமக்கள் மீதும் நடத்தும் தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்தவில்லை என்றால், பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத நிலைகளை இஸ்ரேல் தாக்கும். இந்த நிலைப்பாட்டில் மாற்றமிருக்காது என தெரிவித்தேன் என்று கூறினார்.

அமைதி பேச்சுவார்த்தை தொடக்கம்
இதனை தொடர்ந்தே ஜூன் மாதம் தொடங்கி அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. எனினும், சமீப நாட்களாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிட்ட செய்தியில், தெற்கு லெபனானில், பாதுகாப்பு மண்டலத்திற்கு உள்பட்ட பகுதியில் பியூபோர்ட் மலை பகுதிக்கு அடியில் பல்வேறு சுரங்க பாதைகளை தகர்த்து இருக்கிறோம் என்று தெரிவித்தது. தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சூழலில், ரோமில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில், தெற்கு லெபனானில் உள்ள நகரில் இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.