;
Athirady Tamil News

பலத்த பாதுகாப்பையும் மீறி கர்ப்பமான மோப்ப நாய்.. “எப்படி சாத்தியம்?” விசாரணையில் இறங்கிய பிஎஸ்எப்!

0

பலத்த பாதுகாப்பையும் மீறி எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த மோப்ப நாய் ஒன்று கர்ப்பமானது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், அந்த நாயை பராமரித்து வரும் பிஎஸ்எப் பட்டாலியன் வீரர்களிடம் விளக்கம் கேட்டும் உயரதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ராணுவம், துணை ராணுவம் போன்ற படைகளைச் சேர்ந்த நாய்கள் கர்ப்பம் அடைவது அரிதிலும் அரிதாக நிகழக்கூடிய ஒன்று என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணுவம், போலீஸ், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் கட்டாயம் மோப்ப நாய்கள் பராமரிக்கப்படுவது உண்டு. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்தல், வெடிகுண்டுகளை கண்டுபிடித்தல், போர்க்காலங்களில் ராணுவ வீரர்களுக்கு உதவுவது போன்ற பணிகளில் இவை ஈடுபடுத்தப்படும். இதற்காக சிறு குட்டிகளாக இருக்கும் போதே அவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஜெர்மன் ஷெப்பர்டு, லாப்ரடார் உள்ளிட்ட சில வகை நாய்களே இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, இதுபோன்ற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நாய்கள் இனப்பெருக்கம் செய்யவோ, கர்ப்பம் அடையவோ கூடாது என்பது விதி. ராணுவப் பயிற்சி பெற்ற நாய்கள் என்பதால் அவற்றுக்கு பிறக்கும் குட்டிகள், இயற்கையாகவே அந்த திறமைகளை பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. இந்தக் குட்டிகளை எதிரிகளும், தீவிரவாதிகளும் எளிதில் தவறான வழிக்கு பழக்கப்படுத்திவிடக் கூடும் என்பதால் மிகவும் பாதுகாப்பாக மோப்ப நாய்கள் கண்காணிக்கப்படும். மிகவும் தேவைப்பட்டால் மட்டும் கால்நடை மருத்துவக் குழுவினரின் மேற்பார்வையில் மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே மோப்ப நாய்கள் இனப்பெருக்க செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

மேகாலயா மாநிலத்தில் பிஎஸ்எப் படையில் லால்சி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு ரக பெண் மோப்ப நாய் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நாய் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திடீரென 3 குட்டிகளை ஈன்றது. இதை பார்த்த பிஎஸ்எப் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த நாய் கர்ப்பம் அடைந்திருந்ததையே அப்போதுதான் பிஎஸ்எப் வீரர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பலத்த பாதுகாப்பையும் மீறி மோப்ப நாய் லால்சி கர்ப்பமானது எப்படி என்பது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு பிஎஸ்எப் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், அந்த நாயை பராமரித்து வரும் 43-வது பட்டாலியன் வீரர்களிடமும் இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடுமையான கண்காணிப்பையும் மீறி பிஎஸ்எப் மோப்ப நாய் கர்ப்பமானது அப்படையினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.