;
Athirady Tamil News

கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மறுக்கும் சீனா!: உலக சுகாதார அமைப்பின் தலைவர் மீண்டும் புகார்.. உண்மையான விவரங்களை வெளியிட வலியுறுத்தல்..!! !

0

கொரோனா பாதித்தோர் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தும் சீனா உண்மையான தகவலை தர மறுப்பதாக உலக சுகாதார அமைப்பு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. சீனாவில் கடந்த ஒருமாத காலமாக உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று கோரத்தாண்டவமாடி வருகிறது. தினமும் லட்சக்கணக்கில் பாதிப்பும், ஆயிரக்கணக்கில் பலி எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில், கொரோனா தொடர்பான தகவலை வெளியிடுவதை சீனா நிறுத்திக்கொண்டது. இது மற்ற நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்த உலக சுகாதார அமைப்பு, உண்மையான பாதிப்பு விவரங்களை வெளியிட சீனாவை வலியுறுத்தியது.

இதற்கு சீனா எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில், சீன விஞ்ஞானிகளுடன் உலக சுகாதார அமைப்பின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்பதால் உண்மையான தகவல்களை விரைவாக அளிக்குமாறு சீனாவை டெட்ரஸ் அதானம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அதானம், சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும், அவர்கள் அளித்துள்ள தகவல்களுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. நான் ஏற்கனவே கூறியபடி தங்கள் குடிமக்கள் மீது அக்கறை உள்ள நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கின்றன.

சீனா வழங்கும் தகவல்கள் எங்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும். தற்போதைய சூழ்நிலையில் விரைந்து நடவடிக்கையை மேற்கொள்ள தரவுகள் மிக அவசியமானதாக உள்ளன என்று தெரிவித்தார். இதனிடையே சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. சீனாவின் நிலையை கவனித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்ற நாடுகளின் அறிவுரையை சீனா ஏற்க மறுப்பதாக சாடியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.