;
Athirady Tamil News

ஆசிரியர் தற்கொலை விவகாரம்- தற்கொலைக்கு தூண்டியதாக கணவன், மனைவி கைது!!

0

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 46). இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தணிகையேஸ்வரி (42). இவர் மணலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு தீபன், ரித்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் அருண்பிரசாத், தணிகையேஸ்வரி பள்ளிக்கு சென்றனர். திடீரென அருண்பிரசாத், மணலூருக்கு சென்று, தணிகையேஸ்வரியிடம் வீட்டு சாவியை பெற்றுக்கொண்டு, வீட்டுக்கு திரும்பினார். பின்னர் தணிகையேஸ்வரி செல்போன் மூலம் பலமுறை அழைத்தும், அருண்பிரசாத் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த தணிகையேஸ்வரி வீட்டுக்கு திரும்பினார். அப்போது அங்கு அருண்பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அருண்பிரசாத் எழுதிய பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது.

அதில் எனது வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்கும் சென்று வர பொது வழிப்பாதை இருந்தது. அதனை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து, வேலி அமைத்து விட்டார். இதுகுறித்து பக்கத்து வீட்டுகாரர்களிடம் கேட்டபோது, என்னை மிரட்டினார். மேலும் எனது வீட்டருகே வசிக்கும் உடன்பிறவா தம்பி சாந்து என்பவர் மீது பக்கத்து வீட்டுகாரர்கள் கொட்டகைக்கு தீ வைத்ததாக கூறி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

அதை நான் பார்த்ததாகவும் காவல் நிலையத்தில் பொய் சாட்சி கூற சொன்னார்கள். இதனால் நான் மனமுடைந்து போனேன். எனது உடன்பிறவா தம்பி சாந்து இவர் கொடுத்த தொல்லையால் ஜெயிலுக்கு சென்றுள்ளார். சாட்சி சொல்லவில்லை என்றால் என்னையும், எனது மனைவியும் வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டினார். அதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளோம் என்று ஆசிரியர் அருண்பிரசாத் அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்து வீட்டுகாரர்களான நாமக்காரர் என்னும் சிவசங்கர், அவரது மனைவி ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.