;
Athirady Tamil News

பிரதமர் மோடிக்கு எதிராகவே போராட்டம்.. சாவர்க்கருக்கு எதிராக அல்ல: முடிவுக்கு வந்தது ராகுல், உத்தவ் உரசல்!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதுபற்றி பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இது கடும் விவாதப்பொருளாகி உள்ளது. ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டதாக பா.ஜ.க, சிவ சேனா ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்தால், மகாராஷ்டிராவில் காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) அதிருப்தி அடைந்துள்ளது. ராகுல் பேசியதற்கு உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனால் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) இடையே உரசல் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு பேசியபின் கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக உத்தவ் தாக்கரேவின் சிவ சேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறியதாவது:- நாங்கள் ராகுல் காந்தியுடன் பேசினோம். நமது போராட்டம் சாவர்க்கருக்கு எதிரானது அல்ல, மோடிக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்தப்பட்டது. நேற்று நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சிறப்பானவை.

நம் ஒற்றுமை அப்படியே இருக்கட்டும். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. நேற்று இரவு காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.